திருவனந்தபுரம்: குமரி மீனவர்கள் 2 பேர் இத்தாலிய கடற்படை வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இந்தியாவின் கடல் எல்லைக்குள் நுழைந்து இந்திய மீனவர்களை துப்பாக்கியால் சுட்டது குற்றம் என தீர்ப்பளித்தது. மேலும் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த மீனவர்களுக்கும் உரிய இழப்பீடை இத்தாலி அரசிடமிருந்து இந்திய அரசு பெற்றுக்கொள்ள வேண்டும். இத்தாலி கடற்படை வீரர்களை இந்திய நீதிமன்றத்தில் விசாரணை செய்ய முடியாது என்று உத்தரவிட்டுள்ளது. இதற்கு கேரள முதல்வர் பினராய் விஜயன், முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, காங்கிரஸ் மாநில தலைவர் ரமேஷ் சென்னித்தலா உட்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் முதல்வர் பினராய் விஜயன் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இத்தாலி ராணுவ வீரர்கள் 2 இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் தொடக்கத்திலும், சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு நடந்தபோதும் மத்திய அரசு உரிய கவனம் செலுத்தவில்லை. இத்தாலி வீரர்களை இந்திய நீதிமன்றத்தில் விசாரணை செய்ய முடியாது என்ற சர்வதேச தீர்ப்பாயத்தின் உத்தரவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நம் குடிமகன்களுக்கு நீதி கிடைப்பதற்காக பிரதமர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்துள்ள பிரமாண வாக்குமூலத்தின்படி சர்வதேச தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக அப்பீல் செய்ய முடியாது. எனவே இத்தாலி வீரர்கள் அங்குள்ள நீதிமன்றத்தில் சட்டரீதியாக விசாரணை நடத்தப்படுகிறதா என்பதை உறுதிசெய்ய, சர்வதேச அளவில் மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். 2 உயிர்கள் பறிபோனதுக்கு மிக அதிக நஷ்டஈடு கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* 5 ஆண்டுக்கும் குறைவாகவே சிறை
இந்த வழக்கு இத்தாலி நீதிமன்றத்துக்கு சென்றால் மீனவர்களை கொலை செய்த கடற்படை வீரர்களுக்கு குறைந்தது 6 மாதங்கள் முதல் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை கிடைக்கும். வீரர்கள் திட்டமிட்டு வேண்டுமென்றே துப்பாக்கியால் சுடவில்லை எனவும், கடற்கொள்ளையர் என நினைத்து தற்காப்புக்காக சுட்டதாகவும் சர்வதேச நீதிமன்றத்தில் இத்தாலி வாதிட்டது. இதே குற்றத்தை இத்தாலியில் ஒரு சாதாரண குடிமகன் செய்தால்கூட, அங்குள்ள சட்டம் 589ன் படி அதிகபட்சமாக 5 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை கிடைக்கும்.