×

ஊழியர்களுக்கு கொரோனா தொற்று அம்மா உணவகம் மூடல்

ஆலந்தூர்: ஈக்காட்டுதாங்கலில் உள்ள அம்மா உணவகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், உணவகம் மூடப்பட்டது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதில், வாரம்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் தளர்வில்லாத முழு ஊரடங்கு கடைபிக்கப்படுகிறது. இந்த ஊரடங்கு காலத்தில் ஏழை எளிய மற்றும் ஆதரவற்ற மக்கள் பயன்பெறும் வகையில் சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், பல அம்மா உணவகங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், பெண் ஊழியர்கள் பீதியுடன் பணிபுரிந்து வருகின்றனர்.

சென்னை ஈக்காட்டுத்தாங்கல் நாகி ரெட்டி தெருவில் உள்ள அம்மா உணவகத்தில், ஊரடங்கை முன்னிட்டு இலவசமாக உணவு வழங்கப்பட்டது. இங்கு, தினந்தோறும் சுமார் 300க்கும் மேற்பட்டோர் சாப்பிட்டு வந்தனர். இந்நிலையில், இந்த அம்மா உணவகத்தில் பணியாற்றும் 4 பெண் ஊழியர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 4 பேருக்கும் நோய் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த அம்மா உணவகம் மூடப்பட்டது. மேலும், இந்த உணவகத்தில் தினசரி உணவு சாப்பிட்டவர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதா என கண்டறிய, அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

Tags : Corona ,infection mom restaurant closure ,corona infection mom restaurant closure , Employee, corona infection, mom restaurant, closure
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...