சென்னை: தமிழக அரசுக்கு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி வெளியிட்ட அறிக்கை:
கொரோனா பேரிடர் முடக்க காலத்தில் மாநிலம் முழுவதும் மகளிருக்கு எதிரான குற்றங்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. குடும்ப வன்முறைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இதை தடுப்பதற்கு தமிழக அரசு சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூருக்கு அருகே நயினார்குப்பம் கிராமத்தில் இளம்பெண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று பெற்றோர் கூறியதன் அடிப்படையில் இப்பொழுது அந்த வழக்கு தற்கொலைக்கு தூண்டிய வழக்காக மாற்றப்பட்டு அதே ஊரைச் சேர்ந்த இருவர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஸ்ரீராமன் காலனியைச் சேர்ந்த பெண் ஒருவர் தூக்கிட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது இறப்பில் சந்தேகம் இருக்கிறது என அவரது தந்தை புகார் அளித்துள்ளார். இதுவரை அதில் குற்றவாளிகள் எவரும் கைது செய்யப்படவில்லை. தமிழக காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது காவல்துறை உயரதிகாரிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிதாக பொறுப்பேற்றுள்ளனர். அவர்கள் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் மகளிருக்கு எதிரான வழக்குகள் எந்த நிலையில் உள்ளன என்பதை உடனடியாக சீராய்வு செய்ய வேண்டும். குறிப்பாக, போக்சோ வழக்குகளை தனிக்கவனம் செலுத்தி சீராய்வு செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.