செங்கல்பட்டு: சாத்தான் குளம் வைரல் வீடியோவால் தமிழக காவல்துறையினருக்கு களங்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் செங்கல்பட்டில் நடந்த சம்பவம் சமூக வலைதளத்தில் பரவி தொடர்ந்து காவல் துறையினருக்கு மேலும் களங்கம் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு அடுத்த பாலூரில் காவல் நிலையம் உள்ளது. இதன் அருகில் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கான குடியிருப்பு உள்ளது. இதன் முதல் மற்றும் 2ம் தளத்தில் குடியிருப்பும் தரைத்தளத்தில் கலால்பிரிவு போலீசாரும் பணியாற்றி வருகின்றனர். கலால் காவல் நிலையம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பெரும்பாலான வீடுகள் காலியாக உள்ளன. பாலுர், காவல் நிலையத்தில் காவலர்கள் ஊரடங்கு பணிக்காக வெளியில் சென்றுவிட்டனர்.
அங்கிருக்கும் காவலர்கள் இதை பயன்படுத்தி பெண்களை அழைத்துவந்து உல்லாசமாக இருப்பதாகவும் போலீசார் மது போதையில் இருப்பதாகவும் உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பாக பரவி வருகிறது. ஆட்கள் இல்லாதபோது இரவு நேரத்தில் பெண் ஒருவர் வருவதும் இரவு முழுவதும் அங்கேயே தங்கியிருந்துவிட்டு காலையில் செல்வதாகவும் போலீசாரே வீடியோ எடுத்து சமூக வளை தளத்தில் பதிவு செய்தனர். இதுபொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாலை நேரத்தில் வரும் அந்த பெண்ணை நிறுத்தி ஒருபோலீசார் விசாரிப்பதும். அதற்கு அந்தப் பெண் மேலே இருக்கும் காவல் நிலையத்தில் உள்ள ஒரு காவலரை பார்ப்பதற்காக செல்வதாகவும் அந்த வீடியோவில் கூறுகிறார். மேலும் அந்த காவல் நிலையத்தில் ஏராளாமான மதுபாட்டில்கள் உள்ளன. இந்த சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவலர்களே காவல் நிலையத்தில் இதுபோல் நடந்து கொண்டால் பெண்கள் எப்படி புகார் தர வருவார்கள் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.