×

தென் கொரியாவில் இருந்து மேலும் ஒரு லட்சம் பி.சி.ஆர் டெஸ்ட் கருவிகள் தமிழகம் வந்தடைந்தது

சென்னை: தென் கொரியாவில் இருந்து மேலும் ஒரு லட்சம் பி.சி.ஆர் டெஸ்ட் கருவிகள் தமிழகம் வந்தடைந்தது. தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் 10 லட்சம் பி.சி.ஆர் டெஸ்ட் கருவிகளுக்கு ஆர்டர் தரப்பட்டது. தமிழக சுகாதாரத்துறையிடம் தற்போது 5.60 லட்சம் பி.சி.ஆர் டெஸ்ட் கருவிகள் இருப்பில் உள்ளன. ஏற்கனவே ஆர்டர் தரப்பட்ட 15 லட்சம் பி.சி.ஆர் கருவிகள் முழுவதுமாக தமிழகம் வந்தடைந்தது.

இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 7 லட்சம் பேர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 19,710 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு 1,07,001 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1450 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகமான அளவில் பி.சி.ஆர். கருவிகள் மூலம் கொரோனா நோய் பரிசோதனை செய்யப்படுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சோதனைகளை விரைவுப்படுத்துவதற்காக தென்கொரியாவில் இருந்து 10 லட்சம் பி.சி.ஆர். கருவிகளை வாங்க தமிழக அரசு முடிவு செய்தது.

இந்நிலையில் கொரோனா பரிசோதனைக்காக தென்கொரியாவில் இருந்து இன்று மேலும் 1 லட்சம் பி.சி.ஆர்.கருவிகள் இன்று தமிழகம் வந்தன.
இந்த கருவிகள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு தேவையின் அடிப்படையில் பகிர்ந்து வழங்கப்படும். இதனால் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்படும். பி.சி.ஆர். கருவிகள் மூலம் தமிழகம் முழுவதும் நாள் தோறும் 35,426 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை இந்த கருவிகள் மூலம் 13,06,884 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

தமிழ்நாடு முழுவதும் 94 பரிசோதனை மையங்களில் பி.சி.ஆர். கருவிகள் மூலம் சோதனை செய்யப்படுகிறது. இதில் 49 அரசு மருத்துவமனைகள், 45 தனியார் மருத்துவமனைகள் ஆகும். கொரோனா நோய் தொற்று பரிசோதனைக்காக தமிழக அரசு ரேபிட் டெஸ்ட் கருவிகளை வர வழைத்தது. ஆனால் அது தவறான முடிவுகளை காட்டியதால் திருப்பி அனுப்பப்பட்டது. பி.சி.ஆர். என்பது ரேபிட் டெஸ்ட் போன்று இல்லை. முடிவு வருவதற்கு சற்று நேரம் ஆனாலும் சரியான முடிவுகளை காட்டக்கூடியது.



Tags : PCR ,South Korea ,PCR Test ,Corona , South Korea, PCR Test, Corona
× RELATED வடகொரியா போருக்கு தயாராகி வருகிறது:...