×

கொரோனாவின் கோரப்பிடியில் சென்னை மாநகரம்..: இன்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 30 பேர் உயிரிழப்பு!

சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 30 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் தலைநகர் சென்னைதான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் முதலிடம் வகிக்கிறது. சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் கொரோனா பரவல் வேகம் கட்டுக்குள் வந்தபாடில்லை. நேற்று மாலை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 66,538 ஆக உள்ளது. இதில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து உள்ளனர்.

24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு நேற்றுவரை 1,033 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், தலைநகர் சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மட்டும் கொரோனா பாதிப்பால் 30 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 10, ஸ்டான்லி மருத்துமனையில் 6, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 4, ஓமந்தூரார் மருத்துவமனையில் 7, தனியார் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், சென்னையில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,066 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு தொடரும் மரணங்கள் மக்களிடையே பீதியை அதிகரிக்கச் செய்துள்ளது.


Tags : Chennai , Corona, Chennai, dies
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...