×

பெரியபாளையம் எம்ஜிஆர் நகரில் தேங்கி கிடக்கும் மழைநீரால் கொசு உற்பத்தியாகும் அபாயம்: கால்வாய் அமைக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் ஊராட்சியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள  எம்ஜிஆர் நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெரியபாளையம் பகுதியில் பெய்து வரும் மழையால் எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள தெருவில் சிமெண்ட் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வேலைக்கு செல்பவர்களும், அப்பகுதி மக்களும் தெருவில் தேங்கி நிற்கும் மழைநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. மேலும், தொடர்ந்து பெய்து வரும் மழையால் எம்ஜிஆர் நகர் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் செல்வதற்கு கால்வாய் கூட இல்லை.

இதனால் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் தேங்கிய மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் வாய்ப்புள்ளது. எனவே எம்ஜிஆர் நகர் பகுதியில் மழைநீர் கால்வாய் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, பெரியபாளையம் எம்ஜிஆர் நகரில் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. அப்போது சாலையின் ஓரங்களில் மழை நீரோ அல்லது கழிவு நீரோ செல்ல கால்வாய் அமைக்கவில்லை.

இதனால் மழை பெய்தால் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த மழை நீர் வடிவதற்கு மூன்று நாட்கள் ஆகிறது. அதற்குள் தேங்கி நிற்கும் மழைநீர் கழிவு நீராக மாறிவிடுகிறது. இதில் உற்பத்தியாகும் கொசுக்களால் நோய் பரவும் அபாயம் உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ளதால் காய்ச்சல் வந்தால், ஏதாவது வைரஸ் காய்ச்சலா அல்லது கொரோனா தொற்றால் வந்த காய்ச்சலா என அச்சமாக உள்ளது. எனவே மழைநீர் தேங்காதவாறு வடிகால்வாய் அமைக்க வேண்டும் என கூறினர்.


Tags : MGR city ,rainwater ,city , Periyapayam, MGR Nagar, Rainwater, Mosquito, Canal
× RELATED திமுக சார்பில் தண்ணீர் பந்தல்