×

உண்டியல் பணத்தை தாறுமாறாக செலவு செய்ததாக குற்றச்சாட்டு: கோயில்களின் கணக்குகளை ஆய்வு செய்ய குழு அமைப்பு

* கமிஷனரின் உத்தரவால் அறநிலையத்துறையில் பரபரப்பு

சென்னை: உண்டியல் பணத்தை தாறுமாறாக செலவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தததாக கூறி கோயில்களின் கணக்குகளை ஆய்வு செய்ய குழு  அமைக்கப்பட்டுள்ளது என்று அறநிலையத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அறநிலையத்துறை கட்டுபாட்டில் 44,120 கோயில்கள் உள்ளது.  இதில், சென்னையில் மட்டும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருவான்மியூர் மருந்தீஸ்வரர், வடபழனி முருகன் கோயில், திருவொற்றியூர்  தியாகராஜசுவாமி கோயில் உட்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் அன்றாட பூஜைக்கான செலவு,  அன்னதானம் மற்றும் திருப்பணி ஊழியர்களுக்கான ஊதியம் உள்ளிட்டவை தொடர்பாக கணக்கு பதிவேடுகள் தணிக்கை செய்யப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்தாண்டு செலவு செய்யப்பட்ட கணக்கு விவரங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தணிக்கை செய்யப்பட்டு அறநிலையத்துறை  ஆணையர் அலுவலகத்தில் அதன் விவரங்கள் ஒப்படைக்கப்பட்டன. அந்த தணிக்கையின் ேபாது கணக்கு வரவு செலவு விவரங்களில் குறை  இருக்குமேயானால் சம்பந்தப்பட்ட கோயில் அலுவலர்களிடம் அது குறித்து விளக்கங்கள் கேட்கப்படும். ஆனால், வரவு செலவு கணக்குளில் எந்த வித  குறைபாடு இல்லை எனக்கூறி தணிக்கை அதிகாரிகள் அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தெரிவித்து விட்டனர். இந்த நிலையில்,  கோயில் பணத்தில் கூடுதலாக செலவு செய்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், தற்போது திடீரென சென்னையில் உள்ள 20 முக்கிய கோயில்களின் வரவு, செலவு கணக்கு விவரங்களை ஆய்வு செய்ய கூடுதல்  ஆணையர் ஒருவர் தலைமையில் கண்காணிப்பாளர், ஆய்வர் அடங்கிய குழு ஒன்றை கமிஷனர் பணீந்திர ரெட்டி அமைத்து இருப்பதாக கூறப்படுகிறது.  அந்த குழு ஒவ்வொரு கோயில்களில் நேரில் சென்று வரவு செலவு கணக்கு விவரங்களை ஆய்வு செய்து வருகிறது. இது குறித்து அறநிலையத்துறை  ஊழியர்கள் சிலர் கூறுகையில், சென்னை மண்டலத்தில் உள்ள சில கோயில்களில் அனைத்து கணக்குகளையும் செலவு சீட்டுகளையும் ஒரு குழு  அமைத்து ஆய்வு செய்ய ஆணையர் மூலம் அவர்கள் உத்தரவிட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஏற்கனவே, கோயில்களில் ஜூன் மாதம் வரவு, செலவு விவரங்கள் தணிக்கை செய்யப்பட்டன. தணிக்கையில் குறை இருக்குமானால் அதற்குரிய  நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் வேண்டுமென்றே இப்பொழுது குறிப்பிட்ட கோயில்களில் ஒரு குழு அமைத்து தணிக்கை செய்யப்படுகிறது.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

உயர்அதிகாரிகளுக்கு இடையே குடுமிபிடி சண்டை
அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் உள்ள 2 உயர்அதிகாரிகளுக்கும், சென்னை மண்டல பெண் அதிகாரிக்கும் இடையே பனிப்போர் நடந்து  வருகிறது. இதனால், ஆணையர் அலுவலகத்தில் இரண்டு கோஷ்டிகளாக செயல்படுகிறது. இதனாலேயே ஊழியர்கள் பலிகடாக ஆக்கப்படுகின்றனர்.  எனவே, இந்த மூவரையும் சென்னையை விட்டு வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Committee ,Allegation: A Committee to Investigate Temple Accounts , Bundles of money, temples and charities
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...