×

நாளை முதல் மாவட்டத்திற்குள் பணிக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல 19ம் தேதிக்கு முன்புள்ள இ-பாஸ் போதும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: நாளை முதல் மாவட்டத்திற்குள் பணிக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை என்றும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல 19ம் தேதிக்கு முன்புள்ள இ-பாஸ் பயன்படுத்தலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.  இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சிகளிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பகுதிகளிலும் கடந்த 19ம்தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

 இந்த முழு ஊரடங்கு உத்தரவு இன்று வரை அமலில் உள்ளது. இந்த பகுதிகளில் நாளை (திங்கள்) முதல் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள், அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.  அதேபோன்று தமிழகத்தின் பிற பகுதிகளில்(நோய் கட்டுப்பாட்டு பகுதிகள்தவிர) தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள், அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

 மேலும், பணியாளர்கள் மாவட்டங்கள் இடையே பணிக்கு சென்று வர இ-பாஸ் அவசியம். மாவட்டத்திற்குள் பணிக்கு சென்றுவர இ-பாஸ் அவசியமில்லை. இந்நிலையில், கடந்த 19ம்தேதிக் முன்னர் மாவட்ட ஆட்சியர்களால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள மாவட்டங்கள் இடையே சென்று வருவதற்கான இ-பாஸ் மற்றும் இதர-பாஸ்களை தொழில் நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.  எனவே, நாளை முதல் மாவட்டங்கள் இடையேயான போக்குவரத்திற்கு புதிதாக இ-பாஸ் மற்றும் இதர-பாஸ்கள் பெற அவசியமில்லை. இதுவரை இ-பாஸ், இதர பாஸ்கள் பெறாதவர்கள் உரிய நடைமுறைகளின் படி விண்ணப்பம் செய்து அதனை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நாளை முதல் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள், அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

Tags : Within the District, e-Pass is not required, District, e-Pass, Tamil Nadu Government
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...