கடையம்: கடையம் அருகே அரசபத்து கால்வாயில் மடைக்கு கீழ் பள்ளங்கள் தோண்டுவதால் பணியை பார்வையிட வந்த பிடிஓக்களை விவசாயிகள் முற்றுகையிட்டனர். கடையம் அருகே கடனாநதி அணையின் மூலம் அரசபத்து கால்வாய் வழியாக 500 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் புதுக்குளம் உள்பட பல குளங்களுக்கு இந்த கால்வாய் மூலம் தண்ணீர் வசதி பெறுகின்றன. இந்நிலையில் கருத்தபிள்ளையூர் வழியாக செல்லும் இந்த கால்வாயில் கடந்த சில நாள்களாக நூறுநாள் பணியாளர்கள் மூலம் வேலை நடந்து வருகிறது.
இந்த பணிகளை பார்வையிடுவதற்கு கடையம் ஆணையாளர் முருகையா, வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்க வாசகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு வந்த விவசாயிகள் கால்வாயில் ஆங்காங்கே பள்ளம் தோண்டபட்டு வருகிறது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் வரும் போது பள்ளங்கள் நிரம்பி வருவதால் நீரோட்டம் தடைபடுகிறது. மேலும் மடையை விட தோண்டப்படும் பள்ளம் தாழ்ந்து உள்ளதால் சிறிதளவு தண்ணீர் கடை மடைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என குற்றம் சாட்டினர். வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.