காளையார்கோவில்: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே புலியடிதம்மம் கிராமத்தைச் சேர்ந்த 47 வயது முன்னாள் ராணுவ வீரருக்கு ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதற்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அவரது உடலை சொந்த ஊரான புலியடிதம்மம் கிராமத்தில் கல்லறை தோட்டத்தில் புதைப்பதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பல மணி நேரம் காத்திருந்த நிலையில், முன்னாள் ராணுவ வீரரின் சொந்த தோட்டத்தில் புதைக்க குழி தோண்டப்பட்டபோது, அங்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் கிராம மக்களிடம் காளையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசு, மருத்துவ அலுவலர் நிவேக், சுகாதாரத்துறை அதிகாரிகள் பூமி, ராஜேஸ் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பிறகு ஊருக்கு அருகில் உள்ள கல்லறை தோட்டத்தில் 15 அடி ஆழம் தோண்டப்பட்டு சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலின்படி புதைக்கப்பட்டது.