×

சென்னைக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தி.மு.க.வுக்கே ஜெ.அன்பழகன் மறைவு பெரும் இழப்பு: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னைக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தி.மு.க.வுக்கே ஜெ.அன்பழகன் மறைவு பெரும் இழப்பு என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஜெ.அன்பழகன் ஜுன் 2ஆம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த போதிலும் ஜுன் 10ஆம் தேதி காலை 8.05 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. அன்று ஜெ.அன்பழகனின் பிறந்தநாளும் கூட. ஜெ.அன்பழகனின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அவரது தந்தை ஜெயராமன் கல்லறை அருகே குழி தோண்டப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உருவப்படத்தை மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அறிவாலயத்தில் வைக்கப்பட்டு இருந்த ஜெ.அன்பழகனின் உருவப்படத்தை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காணொலி மூலம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இவருடன் இளைஞரணி கழக தலைவர் உதயநிதி மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர். ஜெ.அன்பழகன் படத்திறப்பை தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஜெ.அன்பழகன். சென்னைக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தி.மு.க.வுக்கே ஜெ.அன்பழகன் மறைவு பெரும் இழப்பு.

ஜெ.அன்பழகன் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு மிகப்பெரிய இழப்பு. இன்று மிகவும் சோர்ந்த மனநிலையில் உரையாற்றிக் கொண்டு இருக்கிறேன். கட்சி நிகழ்ச்சிகள், போராட்டங்களை பிரம்மாண்ட நடத்திக்காட்டுபவர் ஜெ.அன்பழகன். ஜெ.அன்பழகன் எதையும் சரி என்றால் பாராட்டுவார், தவறென்றால் விமர்சிப்பார். மனதில் பட்டதை தைரியமாக, வெளிப்படையாக பேசக் கூடியவர். கொரோனாவில் இருந்து மக்களை காக்க போராடிய ஜெ.அன்பழகன் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். சட்டமன்றத்தில் சிங்கம் போல் எழுந்து நின்று பேசக்கூடியவர் ஜெ.அன்பழகன் என  புகழாரம் சூட்டியுள்ளார்.

Tags : DMK Speech ,Chennai ,MK Stalin J.Anbazhagan ,DMK ,MK Stalin ,death , MK Stalin, J.Anbazhagan,DMK
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...