திருமலை: கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் மூடப்பட்டு இருந்த திருப்பதி ஏழுமலையான் கோயில், கடந்த மாதம் தான் மீண்டும் திறக்கப்பட்டது. 11ம் தேதி முதல் அனைத்து பக்தர்களும் தரிசனத்துக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள் உட்பட 10 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக திருப்பதியில் சித்தூர் மாவட்ட கலெக்டர் நாராயண பரத்குப்தா அளித்த பேட்டியில், ‘‘ஏழுமலையான் கோயிலில் தினமும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இவர்களில் 100 பேருக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதில், கடந்த 20 நாட்களில் யாருக்கும் பாதிப்பு கண்டறியப்படவில்லை. ஆனால், தேவஸ்தான ஊழியர்கள் 400 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அர்ச்சகர்கள், மேளம் வாசிப்பவர்கள், விஜிலன்ஸ் ஊழியர்கள் என 10 பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. எனவே, பக்தர்களிடம் இருந்து இவர்களுக்கு வைரஸ் பரவியதாக தெரியவில்லை,’’ என்றார்.
* இன்று அவசர கூட்டம்
அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது பற்றி ஆலோசிக்க, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் இன்று காணொளி காட்சி மூலம் அவசரக் கூட்டம் நடக்கிறது. அதில், தரிசன நடைமுறையை மாற்றுவது பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.