சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. 3 மாதங்கள் ஆன நிலையிலும் இதனை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 13 மண்டலங்களில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மண்டலத்தில் ராயபுரம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் தற்போது வரை 62,598 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 38,947 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 964 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, 22,686 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதை தவிர்த்து பிற மாவட்டங்களை சேர்ந்த 903 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், கொரோனா நோயை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் அரசு பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள அனைத்து இடங்களிலும் மாநராட்சி அதிகாரிகள் மூலமும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலமும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து, சென்னையில் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில், கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது, அங்கு மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.