நெல்லை: சாத்தான்குளம் கொலை வழக்கில் அழிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளின் சில பதிவுகள் கிடைத்துள்ளதாக சிபிசிஐடி ஐ.ஜி.சங்கர் தகவல் தெரிவித்துள்ளார். சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் (58). இவரது மகன் பென்னிக்ஸ்(31). இவர்கள் இருவரும் கடந்த 19ம் தேதி சாத்தான்குளம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, 20-ம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். உடல்நலக்குறைவால் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 22ம் தேதி இரவு அனுமதிக்கப்பட்ட பென்னிக்ஸ், 23ம் தேதி அதிகாலை ஜெயராஜ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால், அந்த விசாரணை தொடங்கும் வரை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த செவ்வாயன்று உத்தரவிட்டது. இந்த நிலையில், சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு தொடர்பாக இன்று செய்யதியாளர்களை சந்தித்த சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர், தலைறைவாக உள்ள காவலர் முத்துராஜ் இன்னும் 2 நாள்களில் கைது செய்து விடுவோம். சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில், அழிக்கப்பட்ட சில சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன.
வழக்கு தொடர்பாக ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸை விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. வழக்கில் தொடர்புடைய சிசிசிடிவி காட்சிகள் சில கிடைத்துள்ளன, என கூறியுள்ளார். மேலும், இந்த வழக்கில் அரசியல் தலையீடு ஏதும் இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, வழக்கில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என்றும் பதில் அளித்துள்ளார். முன்னதாக, இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் அழிந்ததாக கூறப்பட்டது. இதனை தொழில்நுட்பம் மூலமாக அழிந்த பதிவுகளை மீட்டெடுக்கும் முயற்சி நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.