காரைக்குடி: காரைக்குடி அருகே செடியில் 2 அடி நீளத்திற்கு கத்தரிக்காய் வளர்ந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பையா (76). கூட்டுறவு அச்சக முன்னாள் ஊழியர். இவர் தனது வீட்டு தோட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு முன் கத்தரிக்காய் விதை போட்டு வளர்த்துள்ளார். தற்போது இச்செடியில் நாட்டு கத்தரிக்காய் இரண்டு அடி நீளத்திற்கு வளர்ந்துள்ளது.
ஒரே செடியில் எட்டு கத்தரிக்காய் அரை அடி முதல் இரண்டு அடி நீளம் வரை வளர்ந்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர். கருப்பையா கூறுகையில், ‘‘எனக்கு சின்ன வயதில் இருந்தே வீட்டு தோட்டத்தில் ஆர்வம் அதிகம். அப்படி கத்தரிக்காய் செடி வைத்து வளர்த்த போது இரண்டு அடி நீள அளவில் கத்தரிக்காய் காய்த்திருப்பது ஆச்சர்யமாக உள்ளது’’ என்றார்.