×

சட்டக்கல்லூரியில் இருந்து வெளிவரும் இளம் வக்கீல்களுக்கு ரூ.3 ஆயிரம் உதவித்தொகை

சென்னை: சட்டக்கல்லூரியில் இருந்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டு காலத்திற்கு மாதம் ₹3 ஆயிரம் உதவித்தொகை வழங்க முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் நன்மதிப்பையும், சமத்துவத்தையும் அடைவதை உறுதி செய்வது சட்டம். இப்படிப்பட்ட சட்டத்தை நிலைநாட்டுவதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் வழக்கறிஞர்கள்.
வழக்கறிஞர்கள் நலனில் பெரிதும் அக்கறை கொண்ட அரசு, வழக்கறிஞர்களின் நலன் கருதி இறந்த வழக்கறிஞர்களின் வாரிசுகளுக்கு நல உதவி வழங்கிடும் திட்டத்தை முதன்முதலில் எம்ஜிஆர் 1987ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி வழங்கப்பட்டு வந்த நிதி உதவித்தொகையை 2 லட்சம் ரூபாயில் இருந்து 5.25 லட்சம் ரூபாயாக கடந்த 2012ம் ஆண்டு முதல் உயர்த்தி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 30.1.2018 அன்று, இந்த நலநிதியை ₹5.25 லட்சத்தில் இருந்து ₹7 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டேன். சட்டப்படிப்பினை முடித்து கல்லூரியில் இருந்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள், பார் கவுன்சிலில் நிரந்தர பதிவு சான்றிதழ் பெறுவதற்கு முதலில் தேசிய அளவிலான வழக்கறிஞர்கள் குழும தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

அதன் பின்னர் இவர்கள் இளநிலை வழக்கறிஞர்களாக, மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் 2 அல்லது 3 ஆண்டுகாலம் பயிற்சி பெற வேண்டும். கிராமப்புற மற்றும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து சட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள், சட்டப்படிப்பினை முடித்து விட்டு அவர்கள் வழக்கறிஞர்களாக பணியாற்றுவதற்கு குறைந்தபட்சம் 3 அல்லது 4 ஆண்டுகள் தேவைப்படுகிறது. இக்கால கட்டத்தில் பல வழக்கறிஞர்கள் மிகவும் வறுமையான நிலையில் உள்ளதோடு, ஒரு சிலர் தங்களை வழக்கறிஞர்களாக நிலைநிறுத்திக்கொள்ள இயலாமல் வேறு மாற்றுத்தொழிலுக்கு சென்று விடும் நிலையும் உள்ளது. இதுபோன்று தற்போது வறுமையில் இருக்கும் இளம் வழக்கறிஞர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் ஒரு சிறப்பான திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த உள்ளது. இதன்படி இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகாலத்திற்கு மாதம் ₹3 ஆயிரம் உதவித்தொகை வழங்க உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : lawyers ,law school , 3000 scholarships for lawyers, emerging and young lawyers
× RELATED வழக்கறிஞர்கள் சாலை மறியல்