புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை பதறச் செய்கிறது. இக்கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினரின் 7 வயது சிறுமி வெளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போன நிலையில் காவல்துறையில் புகார் அளித்தனர். பின்னர் போலீஸார் தீவிரமாக தேடி வந்தநிலையில், மோப்ப நாயின் உதவியுடன் நேற்று சிறுமியின் உடலை கண்டறிந்தனர்.
இதனையடுத்து கிராமத்திற்கு அருகே கருவேல மரங்கள் நிறைந்த பகுதியில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது .தொடர்ந்து, சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதுதொடர்பாக ராஜேஷ் என்பவரை கைது செய்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது. மேலும் ஒருவரைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முதல்வர் உள்பட அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது இரங்கல் மற்றும் எதிர்ப்புகளை தெரிவித்து குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் இக்கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.