திருச்செந்தூர்: சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் சிசிடிவி பொறுப்பாளரிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். திருச்செந்தூர் அரசினர் மாளிகையில் வைத்து சிசிடிவி பொறுப்பாளர் தாமஸ் பிரான்ஸிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் கோவில்பட்டி கிளை சிறையில் மர்மமான முறையில் மரணமடைந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரித்துப் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது. சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இருவரையும் போலீசார் தாக்கியதில் உயிரிழந்த வழக்கில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 5 பேரைக் கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, உயர்நீதிமன்ற கிளை உத்தரவின்படி ஓய்வுப்பெற்ற நீதிபதி பாரதிதாசன் 6வது நாளாக விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் அளித்துள்ளதாக கூறப்படும் நிலையில், காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராவை ஆப்பரேட் செய்த காவலர் தாமஸ் பிரான்ஸை மாஜிஸ்திரேட் பாரதிதாசன் ஆஜராக உத்தரவிட்டார். இதனையடுத்து திருச்செந்தூரில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் முன்னிலையில் தாமஸ் பிரான்ஸ் ஆஜரானதை தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, சிசிடிவி காட்சிகள் தானாக அழிந்தது எப்படி என்பது குறித்து தாமஸ் பிரான்ஸிஸ்சிடம் மாஜிஸ்திரேட் கேள்வி எழுப்பியுள்ளார்.