ஜோலார்பேட்டை: ஏலகிரி கோட்டூர் பகுதியில் தரமான சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் 14 கிராமங்கள் உள்ளது. இங்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இது சுற்றுலாத்தலம் என்பதால் சுற்றுலாப்பயணிகள் அன்றாடம் வாகனங்களில் வந்து செல்கின்றனர். மலைவாழ் மக்களின் வாழ்வாதாரமான விவசாய தொழில் மூலம் விளைவிக்கும் விவசாய பொருட்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். இந்நிலையில், அத்தனாவூரிலிருந்து கோட்டூர் பகுதிக்கு செல்லும் சாலை கடந்த 10 வருடங்களுக்கு முன்பு போடப்பட்டது.
இவை தற்போது குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். புதிய தார்சாலை அமைக்க அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், கலெக்டரிடம் மனுவும் அளித்தனர். அதன்படி, புதிய தார்சாலை அமைக்கும் பணி கடந்த 6 நான்கு தினங்களுக்கு முன்பு தொடங்கினர். ஆனால் தரமற்ற நிலையில் இச்சாலை போடப்பட்டதால் சாலையில் ஆங்காங்கே ஜல்லி கற்கள் பெயர்ந்து காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள ஆய்வு செய்து தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.