கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் மற்றும் சுருளிப்பட்டியைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் நிக்சய், ரூபேஷ், பொறியியல் பட்டதாரி மாணவர்கள் அப்துல் வாஜீத், ஜெயகாந்தன், மோகன். இவர்கள் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊடகவியலாளர்கள், காவலர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோரை கவுரவிக்கும் வகையில் இணையதளம் மூலம் நாடு முழுவதும் 400 பேரை தேர்வு செய்து, குறிப்பு மட்டுமே கொடுத்து படம் வரைய கூறினர். அதன்படி 400 பேரும் குறிப்புகளின்படி சார்ட் பேப்பரில் படம் வரைந்து, இணையத்தில் பதிவேற்றினர். கடந்த மே 23ல் தொடங்கிய இந்த படம் வரைதல் நிகழ்வு, ஜூன் 20ல் முடிந்தது.
400 படங்களையும் ஒன்றிணைத்து, முழு படமாக மாற்றினர். அதில் கொரோனா காலத்தில் பணியாற்றிய, ‘சூப்பர் ஹீரோக்களுக்கு மரியாதை’ என்று தெரிவித்து கலாம் உலக சாதனை புத்தகத்திற்கு அனுப்பினர். அந்நிறுவனத்தினர் இவர்களின் சாதனையை பாராட்டி சான்றிதழ் வழங்கி உள்ளனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், ‘‘கொரோனா காலத்தில், நமக்காக பணியாற்றுபவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, படம் வரைவதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுதியுள்ளோம், நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மற்றும் சிங்கப்பூர் பள்ளியில் இருந்தும் கூட சாதனையில் பலர் பங்கேற்றுள்ளனர்’’ என்றார்.