×

கொரோனாவுக்கு உயிரிழந்தவர் பற்றி 3 நாட்களுக்கு பின் குடும்பத்துக்கு தெரிவித்த அரசு மருத்துவமனை

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தவர் தொடர்பான தகவலை 3 நாள் கழித்துதான் தெரிவித்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். கொடுங்கையூரைச் சேர்ந்த 54 வயது ஆண் ஒருவர் கொரோனா உறுதி செய்யப்பட்டு, கடந்த ஜூன் 6ம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 8 நாட்களுக்கு மேல் அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், 15ம் தேதி இரவு 7.30 மணிக்கு சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்துள்ளார். ஆனால், அவரது மரணம் தொடர்பான தகவலை 3 நாள் கழித்து 18ம் தேதி தான் தெரிவித்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:
ஸ்டாலின் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக 18ம்தேதி மாலை எங்களுக்கு தகவல் கொடுத்தனர். எனவே, நாங்கள் அனைவரும் மருத்துவமனைக்கு சென்று கொண்டு இருந்தோம். மருத்துவமனைக்கு போகும்போது மாநகராட்சியில் இருந்து தொடர்பு கொண்ட அதிகாரிகள், அவர் இறந்து விட்டதாகவும், சீக்கரம் வந்து உடலை பெற்றுக்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்தனர். இறந்தவரின் உடலை பெற்றபோது அளித்த இறப்பு சான்றிதழில் அவர் 15ம் தேதி மரணம் அடைந்திருப்பது தெரியவந்தது. மேலும் 15ம் தேதி இரவு மரணம் அடைந்தவர் தொடர்பான தகவலை அன்றைய தினமே எங்களுக்கு தெரிவிக்காமல் மூன்று நாட்கள் கழித்து, 18ம் தேதி தெரிவித்தது ஏன் என்று கேட்டோம். அதற்கு மருத்துவமனை சார்பில், உங்களுக்கு பலமுறை போன் செய்தோம். லைன் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

* 17ம்தேதி அறிவிப்பு
15ம் தேதி ஸ்டான்லியில் மரணம் தொடர்பான அறிவிப்பு 17ம் தேதி சுகாதாரத்துறை வெளியிட்ட கொரோனா தொடர்பான தினசரி அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. அதில், அவர் 15ம் தேதி இரவு 7.30 மணிக்குதான் இறந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Government hospital ,death ,coroner , Corona, deceased, 3 days later, notified, Government Hospital
× RELATED அரசு மருத்துவமனையில் நாள்தோறும் உணவு