தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை பகுதியில் மருத்துவ முகாமை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் துவக்கி வைத்தார். மேலும், அப்பகுதியில் உள்ள மக்களுக்கு காய்ச்சல், சளி பரிசோதனை செய்வதை பார்வையிட்டு, கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, கொரோனா காரணமாக பல்வேறு நடவடிக்கைகளை மார்ச் மாதம் முதல் அரசு எடுத்து வருகிறது. வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும் முறை தீவிரப்படுத்தப்பட்டு, நோய் அறிகுறி கண்டறிந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 500க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, தினந்தோறும் காய்ச்சல், சளி ஆகியவை கண்டறியப்படுகிறது. இந்த மருத்துவ முகாம்கள் மூலம் இதுவரை 7 லட்சம் பேர் பயனடைந்து உள்ளனர்.
குறிப்பாக நேற்று வரை (ஜூன் 30), 3,65,113 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கு 1000 தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன. நேற்று மட்டும் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் தினந்தோறும் பரிசோதனை செய்யும் என்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் சமூக இடைவெளி கடைபிடிப்பது சிரமமாக உள்ளது.
தண்டையார்பேட்டை பகுதியில் 2,995 தெருக்களில் தினமும் 300க்கும் மேற்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 14 நாட்களில் ஒருவருக்கு கூட தொற்று ஏற்படவில்லை. அதேபோல் 120க்கும் மேற்பட்ட தெருக்களில் கடந்த ஒரு மாதமாக தொற்று பாதிப்பு ஏற்படவில்லை.
மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி ஆகியவற்றை தொடர்ந்து பின்பற்றினால் தொற்று முழுவதுமாக ஒழிக்க முடியும். அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவு 100% சுகாதாரமான முறையில் வழங்கப்படுகிறது. வயதான தொற்று பாதித்தவர்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி வர அந்த மண்டலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டால் போதும். கடந்த 3 ஆண்டுகளை விட இந்த வருடம் இயற்கை இறப்புகள் குறைந்துள்ளது. குறிப்பாக (2018 ஏப்-4859, மே-5149), (2019 ஏப்-4888, மே-5738) (2020 ஏப்-3754, மே-4532) என்ற புள்ளி விவரங்களை அளித்தார்.