அண்ணாநகர்: வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் ஷாஜகான் (23). பிரபல ரவுடி. இவருடைய நண்பர் பிரபு என்பவர் கடந்த 4ம் தேதி வில்லிவாக்கத்தில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடியபோது அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (23) மற்றும் அவருடைய கூட்டாளி அஜித், திவாகர் ஆகியோர் பிரபுவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரபு ஷாஜகானிடம் நடந்ததை கூறினார். உடனே ஷாஜகான், சண்முகத்தை மிரட்டி விட்டு சென்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சண்முகம், ரவுடி ஷாஜகானை நடுரோட்டில் விரட்டி வெட்டி கொலை செய்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வில்லிவாக்கம் போலீசார் திவாகர், மணிகண்டன், அரிகரன், ரமேஷ், சதிஷ்குமார், ஆகாஷ், பஷிர் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும், முக்கிய குற்றவாளியான சண்முகத்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.