திருமலை: ஆந்திர கிராமங்களில் மருத்துவ முதலுதவி செய்யும் 104 வாகனங்கள், அவசர தேவைக்கான 108 ஆம்புலன்சுகள் சேவைக்காககு புதியதாக 1,088 வாகனங்களை முதல்வர் ஜெகன்மோகன் நேற்று வழங்கினார். ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள பெஞ்சி சந்திப்பில் இந்த வாகனங்களை ஜெகன் மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: பொதுமக்கள் சேவைக்காக ஆந்திராவில் 412 ஆம்புலன்சுகள் புதியதாக வாங்கப்பட்டது. தற்போது, 336 ஆம்புலன்சுகள் உள்ளன. இதுவரை ஆண்டுக்கு 6 லட்சத்து, 33 ஆயிரம் பேருக்கு சேவை அளிக்கப்பட்டது. தற்போது, ஆண்டுக்கு 12 லட்சம் பேருக்கு சேவை அளிக்கும் விதமாக 2 மடங்காக ஆம்புலன்சுகள் அதிகப்படுத்தப்பட்டு உள்ளது.
104 நடமாடும் மருத்துவ வாகனத்தில் ஒரு மருத்துவ அதிகாரி, தரவு நுழைவு ஆபரேட்டர், டிரைவர், ஏஎன்எம் மற்றும் ஆஷா ஊழியர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் தொலைதூர கிராமங்களுக்கு நேரடியாக சென்று மருத்துவ பரிசோதனை செய்து இலவசமாக மருந்து வழங்குவார்கள். இதன் மூலம், நகர்ப்புறங்களில் 15 நிமிடங்கள், கிராமங்களில் 20 நிமிடங்கள், மலைவாழ் மக்கள் உள்ள (பழங்குடியினர்) பகுதிகளுக்கு 25 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கும். இவற்றில் பணியாற்றும் டிரைவர்களுக்கு ₹18 ஆயிரத்தில் இருந்து ரூ.28 ஆயிரமாகவும், மருத்துவ உதவியாளர்களுக்கு ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாகவும் சம்பளம் உயர்த்தப்படுகிறது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர். இவ்விழாவில் துணை முதல்வரும், மருத்துவ மற்றும் சுகாதார அமைச்சர் ஆலாநானி, பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திர ரெட்டி, கிருஷ்ணா மாவட்ட கலெக்டர் இம்தியாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.