×

ஜம்மு காஷ்மீரில் பயங்கரம் குழந்தையுடன் வந்த முதியவரை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள்: மசூதியில் மறைந்திருந்து தாக்குதல்

சோப்பூர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரரும், முதியவர் ஒருவரும் உயிரிழந்த நிலையில் 3வயது குழந்தை மீட்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர், பாரமுல்லா மாவட்டம், சோப்பூர் அருகே ரோந்து பணியில் ஈடுபடுவதற்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பேருந்தில் இருந்து இறங்கினார்கள். அப்போது, மசூதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் உயிரிழந்தார். அதே நேரத்தில் ஸ்ரீநகரில் இருந்து கார் ஒன்றில் ஒருவர் தனது 3 வயது பேரக்குழந்தையுடன் ஹந்த்வாரா நோக்கி சென்று கொண்டிருந்தார்.

தீவிரவாதிகள் தாக்குதல் காரணமாக அச்சமடைந்த அந்த நபர் காரை நிறுத்திவிட்டு பாதுகாப்பான இடத்திற்கு செல்ல முயன்றார் ஆனால், துரதிருஷ்டவசமாக குண்டு பாய்ந்ததில் அவர் உயிரிழந்தார். அவர் தூக்கி சென்ற 3 வயது குழந்தை உயிர் தப்பியது. தாத்தா இறந்தது தெரியாமல் சடலத்தின் அருகில் அழுது கொண்டிருந்த குழந்தையை சிஆர்பிஎப் வீரர்கள் மீட்டனர். இந்நிலையில், துப்பாக்கி குண்டுகள் துளைத்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த தனது தாத்தாவின் உடல் மீது அமர்ந்து கொண்டு, அந்த சிறுவன் அழுதுக் கொண்டிருக்கும் புகைப்படம், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதேபோல், அந்த சிறுவனை வீரர்கள் மீட்டு தூக்கிச் செல்லும் புகைப்படத்தை, ஜம்மு காஷ்மீர் போலீசார் டிவிட்டர் பக்கத்தில் பகிந்துள்ளனர்.

* எல்லையில் ஊடுருவிய கும்பல் பாக். தீவிரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் கேரி எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் அதிகாலையில் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, எல்லைக் கட்டுப்பாடு கோட்டை கடந்து, இந்திய எல்லைக்குள் 400 மீட்டர் தூரத்துக்கு ஒரு கும்பல் ஊடுருவி வந்தது. இதனை பார்த்த வீரர்கள் உடனடியாக உஷாராகி கும்பல் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி ஊடுருவலை முறியடித்தனர். இதில் ஒருவன் கொல்லப்பட்டான். கொல்லப்பட்ட தீவிரவாதியிடம் இருந்து ஏகே 47 துப்பாக்கி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. ஊடுருவ முயன்ற கும்பலை சேர்ந்தவர்கள் பதுங்கி உள்ளனரா என தீவிர தேடுதல் வேட்டையில் வீரர்கள் ஈடுபட்டனர்.

Tags : Terrorists ,Kashmir ,Jammu , Jammu and Kashmir, terror, terrorist, child, elderly, terrorist
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...