காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி வரதராஜ பெருமாள் கோயில் அனந்தசரஸ் குளத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தண்ணீரில் இருந்து வெளியே வந்து ஆதி அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில், நாடு முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வந்தனர். இதனால், காஞ்சிபுரம் விழாக்கோலமாக இருந்தது. இந்த விழா, ஆகஸ்ட் 16ம் தேதி முடிவடைந்தது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆளுநர்கள் பன்வாரிலால் புரோஹித், சதாசிவம், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அரசியல் கட்சி பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இதையொட்டி, காஞ்சிபுரம் முழுவதும், கட்டுக்கடங்காத பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வெள்ளத்தில் திளைத்தது. இந்நிலையில், இந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள் கோயில் உள்பட அனைத்து கோயில்களும் நடை அடைக்கப்பட்டுள்ளன. இதனால் கோயில் நகரான காஞ்சிபுரம் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.