துமகூரு: கர்நாடகா மாநிலம், துமகூரு மாவட்டத்தில் உள்ள கோடேகெரே கொள்ளரஹட்டியை சேர்ந்த 45 வயது நபர், ஆடுகளை மேய்க்கும் தொழில் செய்கிறார். நேற்று முன்தினம் இவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், அவர் மேய்த்து வரும் ஆடுகளுக்கும் கொரோனா இருக்குமோ என மக்கள் பயந்தனர். இதையடுத்து, ஆடுகளுக்கும் தொற்று பரிசோதனை செய்யும்படி அமைச்சர் மாதுசாமி உத்தரவிட்டார். அதன் பேரில், கால்நடை துறை மருத்துவர்கள் ஆடுகளுக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்தனர். அதன் மாதிரிகளை மங்களூரு ஆய்வு மையத்துக்கு அனுப்பினர். அதன் முடிவு 2 நாளில் கிடைக்கும் என தெரிகிறது. பல நாடுகளில் விலங்குகளுக்கும் கொரோனா தாக்கி இருக்கிறது. ஆனால், ஆடுகளுக்கு அது வராது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். இருப்பினும், பரிசோதனை செய்யப்பட்ட ஆடுகள் அனைத்தும், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன.
* ஆடுகள் பலி மக்கள் பீதி
கொரோனா பாதித்தவர் மேய்த்த ஆடுகளில் 4 அடுத்தடுத்து இறந்து விட்டன. அதனால், அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதனால், இறந்த ஆடுகளின் சளியை மாதிரியையும் கால்நடை மருத்துவர்கள் சேகரித்து, ஆய்வுவுக்கு அனுப்பியுள்ளனர்.