×

நாட்டில் 109 வழித்தடங்களில் பயணிகள் ரயில்களை இயக்க தனியார் துறைக்கு ரயில்வே அமைச்சகம் அழைப்பு

டெல்லி: நாட்டில் 109 வழித்தடங்களில் பயணிகள் ரயில்களை இயக்க தனியார் துறைக்கு மத்திய ரயில்வே அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. பயணியர் ரயில் போக்குவரத்தில் ஆண்டிற்கு ரூ.40 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுவதால் சில வழித்தடங்களில் தனியார் ரயிலை இயக்குவதற்கு அனுமதி வழங்குவது என மத்திய அரசு முடிவு செய்தது. மேலும், ரயிலின் வருவாயை எப்படி பகிர்ந்து கொள்வது என்று ரயில்வே துறை பேசி வந்தது. இதனை தொடர்ந்து இந்தியாவில் முதலாவது தனியார் ரயில், டெல்லி - உத்திரப்பிரதேசத்தின் லக்னோ இடையே இயக்கப்பட்டது.

இந்நிலையில், நாட்டின் 109 வழித்தடங்களில் பயணிகள் ரயில்களை இயக்க தனியார் துறைக்கு மத்திய ரயில்வே அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. 109 வழித்தடங்களிலும் அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த 150 ரயில்கள் இயக்கப்படும். தனியார் துறை முதலீடு மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் எதிர்பார்க்கப்படுவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு உருவாகும் எனவும் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

மும்பை சென்ட்ரல் – புதுடெல்லி, புதுடெல்லி – பாட்னா, அலாகாபாத் – புணே, தாதர் – வதோதரா ஆகிய மார்க்கங்கள் முக்கியமானவையாகும். இவை தவிர ஹவுரா – சென்னை, ஹவுரா - பாட்னா, இந்தோர்-ஆக்லா, லக்னோ – ஜம்முதாவி, சென்னை – ஆக்லா, ஆனந்த் விகார் – பாகல்பூர், செகந்திராபாத் – குவஹாட்டி, ஹவுரா – ஆனந்த் விகார் ஆகிய மார்க்கங்களும் இதில் அடங்கும். இதில் குறிப்பிடப்பட்டுள்ள மார்க்கங்களில் தனியார் ரயில் சேவையை ஈடுபடுத்துவது தொடர்பாக 100 மார்க்கங்கள் அடையாளம் காணப்பட்டு அவை 10 முதல் 12 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை லக்னோ – டெல்லி மார்க்கத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த மார்க்கத்தில் ரயில் சேவையை ஐஆர்சிடிசி நடத்துகிறது. துணை நிறுவனத்துக்கு ரயில் சேவை விடப்பட்டது இதுவே முதல் முறை.



Tags : Ministry of Railways ,routes ,country , Private, train, railway ministry
× RELATED கோடியக்கரை வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்