புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அறந்தாங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாகூரான், செல்வி தம்பதி. இவர்களது 7 வயது மகள் நேற்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது காணவில்லை. எங்கு தேடியும் அவர்களது மகள் கிடைக்கவில்லை. இதனையடுத்து பெற்றோர் காவல் நிலையத்தில் சிறுமி காணவில்லை என புகார் அளித்தனர். இன்று மாலை சிறுமியின் வீட்டின் பின்னால் தண்ணீர் இல்லாத செடிகள் அடர்ந்த குளத்தில் சிறுமி ரத்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடப்பதைப் பார்த்தவர்கள் உடலை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுமியின் தலை மற்றும் முகத்தில் ரத்தக் காயங்கள் இருந்ததாகவும் சிறுமியின் உடல் கிடந்த இடத்தின் அருகே ரத்தம் சிதறி இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணையில் ஈடுபட்டார். உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில் சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்ததாக ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.