×

'சீனாவின் உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம்'... தொலைத்தொடர்பு துறையின் கோரிக்கையை ஏற்று 4ஜி சேவைக்கான டெண்டரை ரத்து செய்தது பி.எஸ்.என்.எல்!!!

டெல்லி : 4ஜி செல்போன் சேவைக்கான கருவிகள் கொள்முதல் தொடர்பான டெண்டரை பி.எஸ்.என்.எல் ரத்து செய்துள்ளது. எல்லைப் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து சீன நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்பதை தவிர்க்கும் வகையில் பி.எஸ்.என்.எல் நடவடிக்கை எடுத்துள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் இந்தியா, சீன ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலிலல் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள். அந்த சம்பவத்துக்குப்பின் இந்தியாவில் சீனாவுக்கு எதிரான மனநிலை மக்கள் மனதில் எழுந்து வருகிறது. சீனப் பொருட்களை புறக்கணிப்போம் என்ற கோஷமும் வலுத்து வருகிறது. மேலும், மத்திய அமைச்சர்கள் சிலரும் வெளிப்படையாகவே சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று முழுக்கமிட்டுள்ளனர். ரயில்வே அமைச்சகமும் சமீபத்தில் சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த ஒரு ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம், தனது 4ஜி அலைவரிசை விரிவாக்கத்தில் சீன கருவிகளையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய தகவல் தொலைத்தொடர்பு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. பாதுகாப்பு பிரச்னைகள் இருப்பதால் சீன உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் இதுதொடர்பாக டெண்டரை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது இது தொடர்பான முந்தைய டெண்டர்கள் அனைத்தையும் பி.எஸ்.என்.எல். ரத்து செய்துள்ளது.

இந்திய நிறுவனங்களுக்கு அதிகம் வாய்ப்பு அளிக்கும் வகையில் 4ஜி கருவிகளுக்கான புதிய டெண்டர் கோர திட்டமிட்டுள்ளது. 4ஜி அலைவரிசை விரிவாக்க பணிகளில் தேவைகளை மறுஆய்வு செய்வதற்காக தொலைத்தொடர்பு துறை ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்த குழு அறிக்கையை தாக்கல் செய்த அடுத்த இரண்டு வாரங்களில் புதிதாக டெண்டர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  புதிய டெண்டர்களில் சீனாவின் எந்த ஒரு நிறுவனமும் பங்கேற்க முடியாத கட்டுப்பாடுகள் விதிக்கப்படவும் உள்ளனவாம்.

Tags : BSNL ,round ,companies ,Chinese , China, Equipment, Telecommunications, Demand, 4G Service, Tender, Cancellation, BSNL
× RELATED பந்தலூரில் பிஎஸ்என்எல் சேவை குறைபாடு