ஆரல்வாய்மொழி: தாழக்குடி பேரூராட்சியில் புதர் மூடிய நிலையில் இருந்த பழமையான கோயிலில் இருந்த சிலைகள் மாயமாகிவிட்டதால் புதிய சிலை அமைக்க பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர். மன்னர் ஆட்சி காலங்களில் ஏராளமான கோயில்களும், மடங்களும் கட்டப்பட்டன. இக்கோயில்கள் பெரும்பாலும் கல் தூண்கள், கல் மண்டபங்களுடன் அமைந்துள்ளன. கல் தூண்களில் கோயிலின் சிறப்புகள் மற்றும் கோயில்களில் வீற்றிருக்கும் தெய்வங்களின் வரலாறுகளும் பொறிக்கப்பட்டு இருக்கும். தாழக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தவிளை வயல்கள் மற்றும் தோப்புகள் நிறைந்த பகுதியாகும். சந்தவிளை ஜங்ஷன் அருகே சாலையோரம் நியாயவிலை கடை, அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையம், பஸ் நிறுத்த நிழற்குடை ஆகியன உள்ளன. இதன் பின்பகுதியில் உள்ள தோப்புகளுக்கு செல்ல பாதை அமைக்கும் பணி கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது. பொக்லைன் இயந்திரம் உதவியுடன் புதர்கள் அகற்றப்பட்டன. அப்போது புதர்களுக்கு இடையே பல நூறு வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு கல் மண்டபம் தெரிந்தது.
ரோட்டின் ஓரத்தில் கட்டிடங்களும், புதர் செடிகளும் காணப்பட்டதால் அந்த கல் மண்டபம் வெளியே தெரியாமல் இருந்துள்ளது. புதர்களை அகற்றியபோது கல் மண்டபம் வெளியே தென்பட்ட தகவல் அறிந்து அங்கு ஏராளமான பொது மக்கள் கூடினர். அவர்கள் அந்த கல்மண்டபத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அதில் பழமையான கோயில் இருந்ததற்கான அடையாளம் இருந்தது. அதாவது உள் மண்டபம், வெளி மண்டபம் என இரண்டு கல்மண்டபமாக அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதில் வெளிமண்டபத்தின் ஒரு பகுதியில் முருகன் உருவமும், மறு பகுதியில் விநாயகர் உருவமும் புடைப்பு சிற்பமாக உள்ளது. அடுத்து உள் மண்டபத்தில் கல் பீடம் மட்டும் உள்ள நிலையில் சிலை எதுவும் இல்லாமல் இருந்தது. இந்த கோயில் கருவறையில் சிவன் சிலை இருந்திருக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
இது பற்றி சந்தவிளை பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் சுடலைமுத்து கூறும் போது, நான் சிறு வயதாக இருக்கும் போது இப்பகுதியில் நண்பர்களுடன் வந்து விளையாடுவேன். அப்போது இம் மண்டபத்தினை சுற்றி அதிகமான சிறு சிறு சிலைகள் இருக்கும். கருவறை பகுதியிலும் ஒரு சிலை இருந்தது நினைவுக்கு வருகிறது. மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, புதிய சிலை அமைப்பது சம்பந்தமாக சந்தைவிளை மற்றும் பார்வதிபுதூர் பொதுமக்கள் முடிவு எடுத்துள்ளனர். பழமையான சிவன் கோயில் பல ஆண்டுக்கு பின் பார்வையில் பட்டுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது என்றார்.
என்றாலும் இந்த கோயிலில் உள்ள சிலைகள் மாயமாகி உள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. கடத்தல்காரர்கள் சிலைகளை திருடி விற்றார்களா என்றும் தெரியவில்லை. பொதுவாக கோயில்களுக்கு பல ஏக்கர் நிலங்கள் சொத்தாக இருக்கும். திருச்செந்தூர் கோயிலுக்கு குமரியிலும் சொத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த கோயிலுக்கு சொத்துகள் எங்கு உள்ளது,அவை ஆக்ரமிக்கப்பட்டுள்ளதா என்று தேவசம்போர்டு அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும் என்றும் மாயமான சிலைகளை கண்டு பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.