சென்னை: சென்னையில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பெரும்பாலான பயணிகள் பயணத்தை தவிர்த்து வருகின்றனர். சென்னை உள்நாட்டு முனையத்தில் இருந்து கொச்சி, ராஜமுந்திரி, கடப்பா, கவுகாத்தி, விஜயவாடா, விசாகப்பட்டினம், மைசூர் ஆகிய 7 விமானங்கள் மற்றும் அந்தமான் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ், ஐதராபாத், கொல்கத்தா செல்லும் ஏர் ஏசியா என 10 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் நேற்று ரத்து செய்யப்பட்டன.
சென்னையில் இருந்து டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம், மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி, சேலம் உள்ளிட்ட இடங்களுக்கு 26 விமானங்கள் குறைந்த பயணிகளுடன் இயக்கப்படுகின்றன.
அதேபோல் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து 26 விமானங்கள் சென்னை வருகின்றன. விமானங்கள் ரத்தாக காரணம், பயணிகளுக்கு இ-பாஸ்கள் கிடைப்பதில் பிரச்னைதான் என்று விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர். ஜூலை 6ம் தேதியில் இருந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு இ-பாஸ் வழங்குவதில் விதித்துள்ள கடுமையான நிபந்தனைகளையும் ஓரளவு தளர்த்தினால் விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது.