×

ராஜா அண்ணாமலைபுரத்தில் சோக நிகழ்வு சமூக ஆர்வலர், மனைவி கொரோனாவுக்கு உயிரிழப்பு: பரிதவிக்கும் மூளை வளர்ச்சி குன்றிய மகன்

சென்னை: கொரோனா தொற்றால் சமூக ஆர்வலரும் அகில இந்திய பார்வையற்றோர் முற்போக்கு சங்க மாநில தலைவருமான அருணாச்சலம் மற்றும் அவரது மனைவி ஆகியோர் உயிரிழந்தனர். சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கே.வி.பி கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஏ.கே.அருணாச்சலம் (62), பார்வையற்ற மாற்றுத்திறனாளி. இவர், அகில இந்திய பார்வையற்றோர் முற்போக்கு சங்கத்தின் மாநில தலைவராகவும் பதவி வகித்து வந்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான அவர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார். இவர், கீதா (58) என்ற மனைவி மற்றும் 26 வயதுள்ள மணி என்ற மூளை வளர்ச்சி மகனுடன் வசித்து வந்தார்.

கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர் வசித்து வந்த கே.வி.பி.கார்டன் பகுதியை பல நாட்களாக மாநகராட்சி அதிகாரிகள் மூடி மக்கள் யாரும் வெளியே வராதபடி சீல் வைத்தனர். அருணாச்சலம் சமூக ஆர்வலர் என்பதால், ஊரடங்கு காலத்தில் உணவு இன்றி தவித்து வந்த  பார்வையற்றவர்களுக்கு நேரில் சென்று  உதவி செய்து வந்தார். இதற்கிடையே அருணாச்சலத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அவரது மனைவி கீதா மற்றும் மூளை வளர்ச்சி குன்றிய மகன் மணி ஆகியோருக்கும் நோய் தொற்று பரவியது. இதனால் 3 பேரும் ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு கீதாவும், நேற்று காலை அருணாச்சலமும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மகன் மணி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தாய், தந்தை இறந்த செய்தியை கூட அவரால் தெரிந்து கொள்ள முடியாத நிலையில் உள்ளார். தாய், தந்தை இறந்ததால் மூளை வளர்ச்சி குன்றிய மகன் மணி தற்போது எந்தவித ஆதரவுமின்றி சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் ராஜா அண்ணாமலைபுரம் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tragedy event ,death ,Raja Annamalaipuram ,Corona ,event , Raja Annamalaipuram, social activist, wife Corona, death, brainwashed son
× RELATED சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள...