பல்லாரி: கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் சடலங்களை ஒரே பள்ளத்தில் தள்ளி அடக்கம் செய்த சம்பவம் பல்லாரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் கர்நாடகத்தில் சிகிச்சை பலனின்றி 19 பேர் உயிரிழந்தனர். இதில், 12 பேர் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இதையடுத்து அந்த சடலங்களை ஒரே பள்ளத்தில் புதைக்க சுகாதாரத்துறையினர் பாதுகாப்பு கவசங்களுடன் வருகின்றனர். பின்னர், மனிதாபிமானமே இல்லாமல் ஒவ்வொரு சடலத்தையும் இழுத்து வந்து பள்ளத்தில் தள்ளுகின்றனர்.
இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில், இச்சம்பவத்திற்கு பல்லாரி கலெக்டர் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் நகுல் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா நோய் பாதிப்பால் உயிரிழந்தவர்களை ஒரே குழியில் தள்ளி புதைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் தொடராத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதுள்ள குழுவை நீக்கி இனிமேல், கொரோனாவால் இறப்பவர்களின் இறுதி சடங்கு செய்ய பயிற்சி பெற்ற தனிக்குழு அமைக்கப்படும் என்றார்.