×

பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கு: காசிக்கு உதவி செய்ய தடயங்களை அழித்த தந்தை கைது..சிபிசிஐடி போலீசார் அதிரடி!

நாகர்கோவில்: பல பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஏற்கனவே காசி கைது செய்யப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், காசியின் தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பெண் மருத்துவர் உட்பட தமிழகத்தில் பல பெண்களிடம் சமூக வலைத்தளங்கள் மூலம் பழகி ஆபாச படம் எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த காசி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதை தொடர்ந்து அவர் மீது 4 பெண்களும், ஒரு இளைஞரும் அளித்த புகாரின் பேரில் ஒரு போக்சோ வழக்கு, 2 பாலியல் வழக்குகள் ஒரு கந்துவட்டி வழக்கு என 6 வழக்குகள் பதியப்பட்டன. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு உதவி செய்ததாக அவரது நண்பர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். தற்போது, காசி மீதான கந்து வட்டி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். மேலும் பைக்கை அபகரித்தது தொடர்பாக, தனியார் வங்கியில் இருந்தவர்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இருந்தவர்கள் காசிக்கு உதவி செய்ததாக சொல்கிறார்கள். அதனால், சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரி, வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக சம்பந்தப்பட்டவர்கள் 6 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இதற்கிடையே காசியின் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. காசியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட செல்பேசி, மடிக்கணினி, மெமரி கார்டு, ஆகியவற்றை ஆய்வு செய்த சைபர் கிரைம் போலீசார் அதில் இருந்து ஏராளமான ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாக தெரிவித்தனர். மேலும் இந்த ஆதாரங்களை காசியின் தந்தை பாண்டியராஜன் அளித்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. தனது மகனை காப்பாற்றும் நோக்கத்தில் அவர் ஆதாரங்களை அழித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், பணமோசடி செய்த வழக்கில் தடயங்களை அழித்ததாக காசியின் தந்தை பாண்டியராஜனை சிபிசிஐடி போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Porn film, case, kasi, father, arrest, CBCID cops
× RELATED பெண் போலீஸ் ஏட்டு தற்கொலை