சென்னை: சென்னையில் மருந்து வாங்க சென்ற இளைஞரை காவலர்கள் தாக்கிய விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னையில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தேவையின்றி வெளியே வந்ததால் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றன. அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் என்பவர், இருசக்கரவாகனத்தில் சென்ற போது மடக்கி விசாரித்த போலீசாரிடம் மருந்து வாங்க செல்வதாக கூறியுள்ளார்.
அவரது தெருவிலேயே 13 மருந்தகங்கள் இருந்தும் அங்கு வாங்காமல் எதற்கு வாகனத்தில் வரவேண்டும் என கேள்வி எழுப்பிய போலீசார், அவரது வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதனை கண்டித்து அந்த இளைஞர் தர்ணாவில் ஈடுபட போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரை கைது செய்த போலீசார் வாகனத்தில் ஏற்றி சென்றனர். இதுகுறித்து நேரில் விசாரணை மேற்கொண்ட அண்ணா நகர் துணை ஆணையர் முத்துசாமியிடம், மருந்து வாங்க செல்வதாகக் கூறி கையில் பையுடன் அரிசி வாங்க சென்றதாலேயே வாகனத்தை பறிமுதல் செய்ததாக போலீசார் விளக்கமளித்துள்ளனர்.
ஆனாலும் இது போன்ற விரும்பதகாத நிகழ்வுகளை தவிர்க்குமாறு போலீசாருக்கு துணை ஆணையர் அறிவுறுத்தினார். இந்நிலையில் இதுதொடர்பாக மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஊரடங்கை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்நிலையம் அழைத்துச் செல்வது ஏன்? என சென்னை காவல் ஆணையர் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 19-ம் தேதி மருந்து வாங்க சென்ற சதாம் உசேனை போலீஸ் அடித்து காவல் நிலையம் சென்றது. மருந்து வாங்க சென்றவரை தாக்கிய காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.