சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 5,78,854 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 7,70,299 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 7,04,057 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ரூ. 16,19,27,405 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுமுடக்க உத்தரவை உள்ள நிலையில், தடையை மீறி மக்கள் வெளியே நடமாடுவதைத் தடுக்க தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என அரசு எச்சரித்தும், வெளியே சுற்றித் திரிந்த 7,70,299 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் 98 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொரோனா பாதிப்பு ஆங்காங்கே அதிகரித்துக்கொண்டு வருகிறது. இதனையடுத்து தமிழகத்தில் வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. முக்கியமாக சென்னை மாநகரில் அதிகபட்ச பாதிப்பை தமிழகத்தில் ஏற்படுத்தி வருகிறது. இந்த ஊரடங்கு உத்தரவை தீவிரப்படுத்த தமிழக அரசின் அறிவுரையின்படி காவல்துறை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுமுடக்க உத்தரவை மீறிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.