டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.08 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 508,020 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 10,407,209 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5,663,835 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் 57,530 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சீன ஆய்வாளர்கள் உலக அளவில் தொற்றுப் பரவலுக்கான வாய்ப்புள்ள புதியவகை பன்றிக் காய்ச்சல் கிருமியை கண்டுபிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அறிவியல் இதழ் ஒன்றில் சீன ஆய்வாளர்கள் எழுதியுள்ள கட்டுரையில் ஜி 4 என பெயரிடப்பட்டுள்ள அந்த கிருமி ஏற்கனவே தொற்று நோயைப் பரப்பிய H1N1 வகையில் இருந்து தோன்றியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011 முதல் 2018 வரை பன்றிகளின் மூக்கில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் இருந்து 179 வகையான பன்றிக் காய்ச்சல் வைரஸ்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், அவற்றில் பெரும்பாலானவற்றில் ஆதிக்கம் செலுத்திய புதிய வகை ஜி 4 வைரஸ் ஃபெர்ரெட்டுகள் எனப்படும் விலங்கினங்களில் செலுத்தி சோதிக்கப்பட்டபோது மனிதர்களைப் போன்றே காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த வகை கிருமி தொற்று ஏற்கனவே விலங்குகளில் இருந்து ஆய்வாளர்கள், பொது மக்கள் உள்ளிட்ட சிலருக்கு பரவிவிட்டதாகவும், எனினும் மனிதர்களில் இருந்து மனிதர்களுக்கு பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.