×

வாழ்வாதாரம், நோய்த் தொற்று பரவல் தடுப்பு குறித்த எனது ஆலோசனைகளை உடனே செயல்படுத்த வேண்டும்

*முதல்வருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  வலியுறுத்தல்

சென்னை : வாழ்வாதாரம், நோய்த் தொற்று பரவல் தடுப்பு குறித்த எனது ஆலோசனைகளை உடனே செயல்படுத்த வேண்டும் என்று முதல்வரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  வலியுறுத்தி உள்ளார்.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:   ஜூன் 19-ம் தேதிக்குப் பிறகான ஊரடங்குக் காலகட்டத்தில் சென்னையில் தினமும் கொரோனா நோய்க்குப் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மதுரை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் பாதிப்பு மிகவும் அதிகமாகியுள்ளது. கடந்த பத்து நாட்களில் மட்டுமே 413 பேர் கொரோனா நோயால் தமிழகம் முழுவதும் இறந்துள்ளார்கள். இந்த காலகட்டத்தில் 2.55 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்திருப்பதாக அரசு அறிவித்தாலும்- மாவட்ட வாரியாகவோ, மருத்துவமனை வாரியாகவோ, பரிசோதனை செய்த எண்ணிக்கைகளை இதுவரை அரசு வெளியிடவில்லை.

 அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முகக்கவசம் வழங்கப்படும் என்று ஜூன் 2-ம் தேதி அறிவித்தார் முதல்வர் பழனிசாமி. இன்று 27 நாட்கள் கடந்து விட்ட நிலையில் எத்தனை நியாய விலைக் கடைகளில்- எவ்வளவு பேருக்கு முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது? அ.தி.மு.க. அரசு. கேரள மாநிலம் போல் 70 சதவீத மின்கட்டணத்தை செலுத்தினால் போதும்- தவணை முறையில் கூட செலுத்திக் கொள்ளலாம் என்று, நெருக்கடியான இந்த நேரத்தில், ஒரு மனித நேய உத்தரவினைக் கூடப் பிறப்பிக்க இந்த அரசுக்கு மனமில்லை.

 பிள்ளைகள் கைவிட்டதால் மதுரை பழங்காநத்தத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் மதுரையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொரோனாவில் தன் கணவர் உயிரிழந்த சோகம் தாங்க முடியாமல் விருதுநகர் மாவட்டத்தில் ராமபிரபாவதி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொரோனா சோகம், வாழ்வாதாரம் பாதிப்பு, வருவாய் தேடும் குடும்பத் தலைவனை கொரோனாவிற்கு பறிகொடுத்த கொடுமை போன்றவற்றால் மாநிலம் முழுவதும் தற்கொலைகள் தொடர்ந்து வருவது அதிர்ச்சியளிக்கிறது.

ஆகவே ஊரடங்கு குறித்து ஆலோசனை நடத்தும் முதல்வர்  பழனிசாமிக்கு பின்வரும் ஆலோசனைகளை மீண்டும் முன்வைக்கிறேன்.

1.  ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 5000 ரூபாய் நேரடியாகப் பண உதவி வழங்கிட வேண்டும்.
2. ஊரடங்கு கால மின்கட்டணத்தினை- ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி, உடனடியாகக் குறைத்திட வேண்டும்.
3. நியாயவிலைக் கடைகள் மூலம் அனைவருக்கும் விலையில்லா முகக்கவசங்களை அளித்திட வேண்டும்.
4. பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் மற்றும் பிற வருடங்களின் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து- அவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்.
5. முன்களப் பணியாளர்களாக விளங்கும் மருத்துவர், செவிலியர், சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அனைத்து கொரோனா போர் வீரர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களை அளித்திட வேண்டும்.
6. கொரோனா நோய்ப் பாதிப்புக்குள்ளான முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் அரசு அறிவித்த நிதியை உடனே வழங்கிட வேண்டும்.
7. கொரோனா சோதனை குறித்த விவரங்களை விமான நிலையம் வாரியாக, மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட வாரியாக வழங்கிட வேண்டும்.
8. கொரோனா சமூகப் பரவல் ஆகிவிட்டதா இல்லையா என்பது பற்றி, தெளிவான அறிக்கை பெற, தொற்று நோய் மருத்துவ நிபுணர்கள் கொண்ட தனிக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும்.

 விடியவிடிய ஆலோசனைகளைக் கேட்டு அதற்கேற்ப ‘’பல்டி’’ அடித்துவிட்டு, பின்னர் ஊடகங்கள் முன் “ஸ்டாலின் என்ன ஆலோசனை சொன்னார்” என்று வழக்கம் போல் கூறாமல், இந்த ஆலோசனைகளைக் காதுகொடுத்துக் கேட்டு முதல்வர் பழனிசாமி உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதேநேரத்தில், இந்தியாவில் இரண்டாவது அதிகபட்ச நோய்த் தொற்றுக்கு உள்ளான டெல்லியில் நடைபெறும் கொரோனா பரிசோதனை விவரத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.  

இன்று முதல்வரைச் சந்தித்த நிபுணர் குழுவே சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று எச்சரித்துள்ள நிலையில் - டெல்லி அரசு  கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பதோடு- “குருதி நீரியல்” பரிசோதனை முறையில் சோதனை செய்து- நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் அனைவரையும் விரைவில் கண்டறியத் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அது போன்ற “பரிசோதனை முறையை” தமிழ்நாட்டிலும் கடைப்பிடித்து- நேற்றைய தினம் 3940 பேருக்கு நோய்த் தொற்று என்று உருவாகியுள்ள ஆபத்தான சூழலை அடியோடு நீக்குவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முதல்வர் பழனிசாமி எடுக்க வேண்டும் என்றும், பரிசோதனையை அதிகரிக்கக் கேட்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை மிரட்டும் அமைச்சர் உதயகுமாருக்கு முதலமைச்சர் முடிந்தால் கொரோனா நோயின் தீவிரத்தைப் புரிய வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : MK Stalin , MK Stalin,suggestions ,livelihood ,epidemic prevention
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...