கோவை: கோவையில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் சுந்தரரேஷ், கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த வழக்கில், சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு தற்போது பிரிந்திருக்கும் கார்த்திகேயன் மற்றும் தமிழினியை ஒரு வாரத்திற்குள் கோவை மாவட்ட நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆஜராகும் போது யாருடைய தலையீடும் இல்லாமல் அவர்கள் இருவரை மட்டுமே வைத்து விசாரித்து உரிய உத்தரவை கோவை மாவட்ட நடுவர் நீதிமன்ற நீதிபதி பிறப்பிக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த கார்த்திகேயன், தமிழினியை கடந்த 5ம் தேதி திருமணம் செய்துக் கொண்டார். இதையடுத்து கார்த்திக்கேயனையும் அவரது தாயாரையும் தாக்கி விட்டு தமிழினியை அவரது பெற்றோர் அழைத்துவிட்டு சென்றதாக தெரிகிறது. மேலும் தமிழினிக்கு வேறு ஒரு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடப்பதால் தனது மனைவியை மீட்டுத்தரகோரி கார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிமன்றம் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.