பழநி: பழநி அருகே ஆங்கிலேயர் கால நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே போடுவார்பட்டியில் ஆறுமுகம் என்பவரது வீட்டில் சீரமைப்பு பணி நடந்தது. அப்போது இரு பழங்கால நாணங்கள் கிடைத்தன. இதனை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் நந்திவர்மன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த நாணயங்கள் இரண்டும் பிரிட்டிஷ் இந்திய நாணயங்கள் ஆகும். இதில் ஒன்று மிகச்சிறிய 2 அணா நாணயம். 2 நாணயங்களும் வெள்ளியால் செய்யப்பட்டவை. இந்தியா நேரடியாக விக்டோரியா மகாராணியின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது முதல் வெள்ளி, செம்பு நாணயங்கள் வெளியிடப்பட்டன. தற்போது இங்கு கிடைத்துள்ள 2 நாணயங்களில் ஒன்றின் முன்புறத்தில் மகாராணியின் மார்பளவு உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
இடப்புறத்தில் விக்டோரியா என்றும், வலப்புறத்தில் ராணி என்றும் அச்சிடப்பட்டுள்ளது. மற்றொரு பக்கத்தில் 2 அணா, இந்தியா என அச்சிடப்பட்டுள்ளது. 1883ல் கல்கத்தா நாணய சாலையில் அடிக்கப்பட்ட இந்த காசு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அச்சடிக்கப்பட்ட மிகச்சிறிய நாணயமாகும். இதன் அளவு 1.5 செமீ விட்டம், 4.71 செமீ சுற்றளவு உள்ளது. மற்றொரு காசு 3 செமீ விட்டமும், 9.5 செமீ சுற்றளவும் கொண்ட பெரிய காசாக உள்ளது. 1918ல் அச்சடிக்கப்பட்ட இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தின் வலது பக்கம் மன்னர் 5ம் ஜார்ஜ் எனவும், இடதுபக்கம் எம்பரர் எனவும் அச்சிடப்பட்டுள்ளது. மன்னர் 5ம் ஜார்ஜின் படமும் மற்றொரு பக்கம் 1 ரூபாய் இந்தியா எனவும் அச்சடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.