×

கொரோனாவால் மரித்தது மனிதம்!: கணவனுக்கு தொற்று உறுதியானதால் மனைவி விரட்டியடைப்பு...சென்னையில் நிகழ்ந்த சோகம்!!!

சென்னை: சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை வீட்டை காலி செய்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையில் சிந்தாதரிப்பேட்டையில் உள்ள சாமிபண்டாரம் தெருவில் வசித்து வந்த கூலி தொழிலாளி ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருந்த அவரது மனைவியை வீட்டு உரிமையாளர் விரட்டியடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்த அந்த பெண், உணவு, தங்குமிடம் இல்லாமல் மூன்று நாட்களாக சாலைகளில் சுற்றி திரிந்துள்ளார். கடைசியாக சேத்துப்பட்டு பகுதியில் சாலையில் மயங்கி விழுந்து கிடந்த அப்பெண்ணை மீட்ட பொதுமக்கள், மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அப்பெண்ணை அவர் வசித்து வந்த வீட்டிற்கே கொண்டு சென்று விட்ட அதிகாரிகள், அடாவடியாக நடந்துகொண்ட வீட்டு உரிமையாளரை எச்சரித்துவிட்டு சென்றனர். மனித சமூகத்திற்கு கொரோனா மட்டுமே பொது எதிரி என்று பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும், வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை எதிரி போல் நடத்தியது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



Tags : death ,Mani , Wife has been kicked out of her husband's infection ...
× RELATED வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை