சென்னை: அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதியத்தை பறிக்கும் போக்கை கண்டித்து ஜூலை 1ம் தேதி முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அறிவித்துள்ளனர். இதுகுறித்து அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெளியிட்ட அறிக்கை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது போக்குவரத்தை அரசு நிறுத்தி வைத்துள்ளது. அதன் காரணமாக பணியாளர்கள் பணிக்கு வர இயலாத சூழலில் நிலவியது. அரசு சில அதி முக்கியத்துவம் வாய்ந்தவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பேருந்து இயக்கம், பேருந்துகளின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அழைக்கப்பட்ட தொழிலாளர்கள் சேவை மனப்பான்மையுடன் பணிகளில் ஈடுபட்டனர்.
அரசு இம்மாத துவக்கத்தில் சில மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 50 சதவீத பேருந்து இயக்கம் சுழற்சி முறையில் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு பணி ஒதுக்கீடு என கூறப்பட்டது. ஆனால் பயணிகள் இல்லை, வசூல் இல்லை எனக் கூறி பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதின் காரணமாக சுழற்சி முறை பணி அடிப்படையில் பணிக்கு வந்தவர்களுக்கும் பணி வழங்க முடியாத நிலையில் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மண்டல எல்லையில் பணிமனை அமைந்திருந்ததால் அடுத்த மண்டலத்திலிருந்து பணிக்குவர அனுமதி மறுப்பு, அதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து கழக நிர்வாகங்கள் செய்யவில்லை. ஊரடங்கை அரசு அறிவித்த போது பணி செய்யாத காலத்திற்கு ஊதியம் இல்லை என்று எந்த அறிவிப்பும் செய்யவில்லை. ஆனால் போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் ஆளுக்கொரு உத்தரவு் போட்டு ஊழியர்களின் சம்பளத்தை பறிக்கிறது.
இந்த தவறான அணுகுமுறை வேறு எந்த துறையிலும் இல்லை. இந்த அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களை வஞ்சிக்கும் போக்கை கடைபிடிக்கிறது. ஆகவே அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் ஜூலை 1ம் தேதியன்று காத்திருப்பு போராட்டம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் நடத்துவது என கூட்டமைப்பு சங்கங்களின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு போக்குவரத்து கழகத்தில் செயல்படும் தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ,ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி, எச்.எம்.எஸ், டி.டி.எஸ்.எப், எம்.எல்.எப், ஏ.ஏ.எல்.எல்.எப், டி.டபிள்யூ ஆகிய அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.