சென்னை: கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்கான நிலையான நெறிமுறைகள் சார்பதிவாளர் அலுவலகங்களில் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய பதிவுத்துறை ஐஜி அனைத்து மண்டல டிஐஜிக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் பொதுமக்களுடன் இணைந்து பணிகளை மேற்கொள்வதால், அந்த ஊழியர்கள் அதிகமாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, அவர்கள், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் 400 எம்ஜி ஒரு நாளைக்கு 2 மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு 3 வாரத்திற்கு தினமும் ஒரு மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த மாத்திரை சாப்பிட்ட பின்பு எடுத்துக்கொள்ள வேண்டும். ஜிங்க் கோவிட் 400 எம்ஜி மாத்திரை ஒரு நாளைக்கு ஒன்று வீதம் 10 நாட்களுக்கு சாப்பிட வேண்டும் என்று சார்பதிவாளர் பதிவுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அறிவுரை வழங்கினார்.
இந்நிலையில், பதிவுத்துறை ஐஜி ஜோதி நிர்மலாசாமி அனைத்து மண்டல டிஐஜிக்கள், மாவட்ட பதிவாளர்கள், சார்பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கோவிட்-19 நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைக்கான நிலையான நெறிமுறைகளை தவறாது கடைபிடிக்கவும், அனைத்து அலுவலகங்களிலும் கை கழுவுதல், கிருமி நாசினி வழங்குவதற்கான ஏற்பாடுகளை உறுதி செய்யவும் மற்றும் சமூக விலகல் தவறாமல் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. இந்த நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவதை புகைப்படங்கள் மூலம் அலுவலக வாட்ஸ் அப் குழுக்களில் பகிரவும் கோரப்படுகிறது. அனைத்து மண்டலத்திற்குட்பட்ட அனைத்து அலுவலகங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்து அறிக்கை அனுப்ப அனைத்து டிஐஜிக்கள் கோரப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.