×

சென்னையில் இருந்து மேற்கு வங்கத்திற்கு கொரோனாவுடன் விமானத்தில் பறந்த வட மாநில தொழிலாளி: அதிகாரிகள் அதிர்ச்சி

திருவொற்றியூர்: மணலி புதுநகரில் குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிந்த வடமாநில தொழிலாளர்கள் ஊரடங்கு காரணமாக தங்களது சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். ஒருசிலர் மட்டும் இங்கேயே தங்கி இருந்தனர். இவர்களில், மேற்கு வங்கத்தை சேர்ந்த சுகன் விகாஸ் (26) என்பவருக்கு காய்ச்சல் இருந்ததால், கடந்த 2 நாட்களுக்கு முன் பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மணலி சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று மாலை குடிசை மாற்று வாரிய கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்கு வந்தனர். ஆனால், அங்கு சுகன் விகாஸ் இல்லை. அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோத, சுகன் விகாஸ் நேற்றுகாலை விமானம் மூலம் மேற்கு வங்கம் சென்று விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சுகாதார அதிகாரிகள் இது சம்பந்தமாக மணலி புதுநகர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அவர்கள் மேற்கு வங்க சுகாதார அதிகாரிகளை தொடர்புகொண்டு, இதுபற்றி தெரிவித்துள்ளனர்.


Tags : state worker ,Chennai ,North ,West Bengal , Chennai, West Bengal, Corona, Aircraft, North State Worker
× RELATED வடசென்னையில் வேட்புமனு தாக்கல்...