×

மருத்துவமனைக்கு வரும் போதே தந்தை, மகன் மோசமான நிலையில் இருந்தனர்; சாத்தான்குளம் விவகாரத்தில் அரசு மருத்துவர் விளக்கம்

தூத்துக்குடி; தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசரடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் . இவருடைய மகன் பென்னிக்ஸ். இவர்கள் சாத்தான்குளம் மெயின்பஜாரில் செல்போன் கடை நடத்தி வந்தனர். சம்பவத்தன்று இரவு ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்திருந்த விவகாரத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் போலீசார் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் 2 பேரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த 22ந்தேதி இரவு பென்னிக்சுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிறிது நேரத்தில் இறந்தார். ஜெயராஜூம் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, மறுநாள் பலியானார். போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு அவர்கள் இருவரும் இறந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  அரசியல் கட்சி தலைவர்கள், வணிக அமைப்புகள் இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்து வருகிறார்கள். போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலில் தான் தந்தை, மகன் இருவரும் இறந்துவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அரசு மருத்துவர் பாலசுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அரசு மருத்துவர் கூறியதாவது: தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துவரும்போதே மோசமான நிலையில் இருந்தனர். அவர்கள் சுயநினைவுடன் தான் இருந்தார்கள். அவர்களின் உடல்களில் காயங்கள் இருந்தன. மூச்சுத்திணறலுடன் வந்ததால் அவர்களுக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களின் உடலில் ரத்தம் கசிந்த நிலையில் இருந்தது. மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பின் ரத்தக்கசிவு நின்று விட்டது. ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் கடைசி நிமிடத்தில்தான் என்னிடம் அழைத்து வரப்பட்டனர். இவ்வாறு கோவில்பட்டி அரசு மருத்துவர் பாலசுப்ரமணியன் கூறினார்.

Tags : arrival ,hospital ,doctor ,Government ,Sathankulam , Hospital, father, son, sathankulam
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...