ஊட்டி: ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்காக தொட்டிகளில் நாற்று தொட்டிகளில் மும்முரமாக நடந்து வருகிறது. 2ம் சீசனான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள். கொரோனா பாதிப்பால், முதல் சீசனின் போது சுற்றுலா பயணிகள் யாரும் வர முடியாத நிலை ஏற்பட்டதால், மலர் கண்காட்சி உள்ளிட்ட அனைத்து கண்காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், இரண்டாம் சீசனுக்கான தற்போது அனைத்து பூங்காக்களும் தயார் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, தாவரவியல் பூங்காவில் வழக்கம் போல், இரண்டாம் சீசனுக்கன விதைப்பு பணிகள், நாற்று உற்பத்தி ஆகியவை துவக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், தொட்டிகளில் பூக்கும் மலர் செடிகள் தற்போது நடவு செய்யப்பட்டு வருகின்றன. சில மலர் செடிகள் விதைகள் இன்றி தண்டுகளை கொண்டு வளரும் தன்மை கொண்டவை என்பதால், தற்போது மேல் கார்டன் நர்சரியில் ஊழியர்கள் தொட்டிகளில் நடவு பணிகளை துவக்கியுள்ளனர். இந்த தொட்டிகளில் ஆகஸ்ட் மாதம் முதல் பூக்கள் பூக்கும். அதன்பின், பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகை மற்றும் மாடங்களில் அலங்கரித்து வைக்கப்படும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.