டெல்லி: கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அனுமதியின்றி விளம்பரம் செய்த பதஞ்சலி நிறுவனத்தின் இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா, யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோர் மீது ஜெய்ப்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பதஞ்சலி நிறுவனம் அண்மையில் தெரிவித்திருந்தது. இந்த மருந்தை உட்கொண்டால் 7 நாட்களில் கொரோனா குணமடையும் என்று அறிவித்தது.
கொரோனில் எனும் இந்த மருந்தை கொரோனா நோயாளிகள் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொடுத்து பரிசோதனை வெற்றியடைந்தது என்று பதஞ்சலி நிறுவன இயக்குனர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் அனுமதி பெறாமல் மருந்தை நோயாளிகள் மீது பரிசோதித்து, இந்த மருந்தை மக்களுக்கு விளம்பரப்படுத்தியதாக பாபா ராம் தேவ், பதஞ்சலி நிறுவன இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா உள்ளிட்ட பலர் மீது வழக்கறிஞர் பல்ராம் ஜாகத் என்பவர் ஜெய்பூர் ஜோதிநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பல்ராமின் புகாரையடுத்து மாநிலத்தில் பலரும் அவர்கள் மீது புகாரளித்தனர்.
இதை தெடார்ந்து பாபா ராமதேவ், பாலகிருஷ்ணா ஆச்சார்யா, தேசிய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பி.எஸ். தோமர், அவரின் மகன் அனுராக்தோமர், மூத்த அறிவியல் விஞ்ஞானி அனுராக் வர்ஷினி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாபா ராம்தேவ், பாலகிருஷ்ணா ஆச்சார்யா உள்ளிட்ட 6 பேர் மீது ஐபிசி பிரிவு 420 மற்றும் தடைசெய்யப்பட்ட விளம்பரங்கள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜெய்ப்பூர் நகர உதவி ஆணையர் அசோக் குப்தா தெரிவித்துள்ளார்.