×

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்...! அதிகார அத்துமீறல் முடிவுக்கு வர வேண்டும்: நடிகர் சூர்யா ஆவேச அறிக்கை வெளியீடு!!!

சென்னை: அதிகாரத்தின் அத்துமீறல்‌ முடிவுக்கு வரவேண்டும் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். சாத்தான்குளம், தந்தை மகன் இருவரும், போலீசாரின் தாக்குதலால் உயிரிழந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், சூர்யா பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்தவர்களுக்கு கூட மரண தண்டனை கூடாது என மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன. சாத்தான்‌குளம்‌ காவல்‌ நிலையத்தில்‌, இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம்‌ ஏற்படுத்தும்‌ அளவிற்கு நிகழ்ந்த போலீசாரின்‌ லாக்கப்‌ அத்துமீறல்‌ காவல்‌ துறையின்‌ மாண்பை குறைக்கும்‌ செயல்‌. இது ஏதோ ஒரு இடத்தில்‌ தவறி நடந்த சம்பவம்‌ என்று கடந்து செல்ல முடியாது. போலீசாரால்‌ கொடூரமான தாக்குதலுக்கு ஆளான தந்‌தை ஜெயராஜ்‌, மகன்‌ பென்னிக்ஸ்‌ இருவரையும்‌ அரசு மருத்துவர்‌ பரிசோதனை செய்து, நலமாக இருப்பதாக சான்று அளித்திருக்கிறார்‌.

நீதியை நிலைநாட்ட வேண்டிய மாஜிஸ்ட்ரேட்‌, பாதிக்கப்பட்டவர்களின்‌ நிலையை பரிசோதிக்காமல்‌, இயந்திர கதியில்‌ சிறையில்‌ அடைக்க உத்தரவிட்டுள்ளார்‌. சிறையில்‌ நடத்தப்பட வேண்டிய சோதனைகளும்‌ முறையாக நடக்கவில்லை. இத்தகைய கடமை மீறல்‌ செயல்கள்‌, ஒரு குடிமகனின்‌ உரிமையில்‌ நம்‌ அதிகார அமைப்புகள்‌ காட்டும்‌ அலட்‌சியத்தை வெளிச்சம்‌ போட்டு காட்டுகின்றன. அதனால்‌ இதுபோன்ற துயர மரணங்கள்‌ ஒரு வகையான திட்டமிடப்பட்ட குற்றமாக (Organised Crime) நடக்கிறது.

மனசாட்சியை உலுக்கிய, தந்தை, மகன் உயிரிழப்பு:

ஒருவேளை இருவரின்‌ மரணம்‌ நிகழாமல்‌ போயிருந்தால்‌, போலீசாரின்‌ இந்தக்‌ கொடூர தாக்குதல்‌ நம்‌ கவனம்‌ பெறாமலேயே போயிருக்கும்‌. தங்கள்‌ மரணத்தின்‌ மூலம்‌ தந்தை, மகன்‌ இருவரும்‌ இந்தச்‌ சமூகத்தின்‌ மனசாட்சியை உலுக்கி இருக்கிறார்கள்‌. இந்த கொடூர மரணத்தில்‌, தங்களுடைய கடமையை செய்யத்‌ தவறிய அனைவரும்‌ நீதியின்‌ முன்‌ நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்‌. உயர்‌ நீதிமன்றம்‌ தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவது, நீதி கிடைக்கும்‌ என்ற நம்பிக்கையை அளிக்கிறது. இதேபோல, தவறு செய்கிறவர்கள்‌ யாராக இருந்தாலும்‌ தண்டனையில்‌ இருந்து தப்பிக்க முடியாது என்கிற நம்பிக்கையை அரசாங்கமும்‌, நீதி அமைப்புகளும்‌ மக்களிடம்‌ உருவாக்க வேண்டும்‌. மாறாக, நமது அதிகார அமைப்புகள்‌ அவநம்பிக்கையையே ஏற்படுத்துகின்றன.

நேர்மையாக உழைக்கும் காவல் துறையினருக்கு வணக்கம்:

இரண்டு உயிர்‌ போவதற்கு காரணமானவர்களுக்கு இதுதான்‌ தண்டனையா? என்று எழுந்த விமர்சனத்துக்குப்‌ பிறகே, சம்பந்தப்பட்ட போலீசார்‌ பணியிடை நீக்கம்‌ செய்யப்பட்டனர்‌. காவல்துறையில்‌ அர்ப்பணிப்புடன்‌ தன்‌ கடமையை செய்கிற பலரை தனிப்பட்ட முறையில்‌ நன்கு அறிவேன்‌. ஒட்டுமொத்த நாடும்‌ இயங்க முடியாமல்‌ ஸ்தம்பித்து நிற்கிற இந்த நேரத்திலும்‌ ஓய்வில்லாமல்‌ மக்களின்‌ நலனுக்காக காவல்துறையினர்‌ உழைக்கின்றனர்‌. கொரோனா யுத்தத்தில்‌ களத்தில்‌ முன்‌ வரிசையில்‌ நிற்கிற காவல்துறையினருக்கு தலைவணங்குகிறேன்‌. அதேநேரம்‌, அதிகாரத்தை பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தும்‌ காவல்துறையினருக்கு எனது கடும்‌ கண்டனங்கள்‌.

ஈடுசெய்ய முடியாத இழப்பு:

அதிகார அத்துமீறல்‌ வன்முறையால்‌ ஒருபோதும்‌ மக்களின்‌ மனதை வெல்ல முடியாது. அன்பும்‌, அக்கறையும்‌ கொண்டு கடமையை செய்கிற காவல்துறையினரே மக்களின்‌ மனதில்‌ நிலைத்து நிற்கிறார்கள்‌. ஒரே நேரத்தில்‌ இரண்டு உயிர்கள்‌ பலியாகி இருப்பது, ஒரு குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. தந்தையையும்‌, மகனையும்‌ இழந்து வாடுகிற அந்த குடும்பத்தினரின்‌ துயரத்தில்‌ நானும்‌ பங்கெடுத்துக்‌ கொள்கிறேன்‌.

முழுமையான தண்டனை விரைவில் தேவை:

இனிமேலும்‌ இதுபோன்ற அதிகார வன்முறைகள்‌ காவல்துறையில்‌ நிகழாமல்‌ தடுக்க, தேவையான மாற்றங்களை, சீர்திருத்தங்களை அரசும்‌, நீதிமன்றமும்‌, பொறுப்புமிக்க காவல்‌ அதிகாரிகளும்‌ ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்‌. குற்றம்‌ இழைத்தவர்களும்‌, அதற்கு துணை போனவர்களும்‌ விரைவாக தண்டிக்கப்பட்டு நீதி நிலைநிறுத்தப்படும்‌ என்று பொதுமக்களில்‌ ஒருவனாக நானும்‌ காத்திருக்கிறேன்‌ என நடிகர் சூர்யா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags : Suriya , Criminals, punished…, Suriya's statement, released
× RELATED இளம்பெண்ணுக்கு லவ் டார்ச்சர்: வாலிபர் சிறையில் அடைப்பு